பயிர் உற்பத்தி மானியம் உயர்வு
புதுச்சேரி: மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை கையாள அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பயிர்களுக்கு உற்பத்திய மானியம் வழங்கப்படுகிறது. அதில், நெல் உற்பத்தி மானியமாக பொதுப்பிரிவினருக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும், அட்டவணை பிரிவினருக்கு ரூ. 6 ஆயிரம், பாரம்பரிய நெல் வகைகளுக்கு முறையே ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் என, ஆண்டிற்கு இரு பருவத்திற்கு இந்த உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசுகையில், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிர் உற்பத்தி மானியம் உயர்த்தப்படும் என, அறிவித்தார். அதில், தற்போது வழங்கப்பட்டு வரும் உற்பத்தி மானியத்துடன் ரூ. ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர் என, அறிவித்தார். ஆனால், கடந்தாண்டு பழைய உற்பத்தி மானியமே வழங்கப்பட்டதால், விவசாயிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். இந்நிலையில், பயிர் உற்பத்தி மானியத்தை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை கடந்த 25ம் தேதி அரசு வெளியிட்டுள்ளது. அதேபோன்று இடுபொருட்கள் மற்றும் விதை மானியமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானிய உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி ஆண்டிற்கான அனைத்து பயிர் உற்பத்தி மானியங்களும் வழங்கப்பட்டுவிட்டது. அதனால், இந்த அரசாணை வரும் 2026-27 நிதியாண்டு அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.