கடலில் இறங்குவதை தடுக்க தன்னார்வ குழு அமைக்க முடிவு
புதுச்சேரி : புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க தன்னார்வ அமைப்புகளை கொண்டு குழு அமைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி சிறந்த மாநிலம் என்பதால், கடந்த வாரம் முதலே சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். இதனால், அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம், கூட்டம் நிரம்பியுள்ளது. இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகையால், நகரின் பல்வேறு பிரதான சாலைகளின் இருபுற ஆக்கிரமிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடற்கரை சாலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், கடலில் இறங்குவதை தடுக்க, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்புகளை கொண்டு, குழு அமைத்து கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.