பிரேத பரிசோதனைக்கு தாமதம் கடலுார் மருத்துவமனையில் தர்ணா
கடலுார், : உயிரிழந்த வேன் டிரைவர் உடலை பிரேத பரிசோதனைக்கு தாமதப்படுத்தியதால், உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக்,36; டிரைவர். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, கார்த்திக் காதில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை, கடலுார் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர்.இந்நிலையில், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் இல்லை எனக்கூறி தாமதப்படுத்திய நிலையில், மதியம் 1:00 மணியளவில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கார்த்திக் உடலை அனுப்பி வைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மருத்துவமனை நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களிலம், டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கடலுாரிலேயே பிரேத பரிசோதனை செய்வதாக கூறியதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.