தி.மு.க., - காங்., கட்சிகள் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர் அ.தி.மு.க., அன்பழகன் காட்டம்
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலையில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி அவர், பேசியதாவது: புதுச்சேரியில் 5 ஆண்டுகால என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகின்றன. கடந்தமுறை இருண்ட ஆட்சி கொடுத்த தி.மு.க.,- காங்., கட்சியினர் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாயில் பொய்யை தவிர வேறு எதுவும் வருவதில்லை. தி.மு.க., வாய்மூடி மவுனம் காத்து தங்களது தொழிலை வளர்த்து வருகின்றனர். தேர்தல் தோல்வி பயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர் என, பேசினார். விழாவில் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மகளிரணி இணைச் செயலாளர் கோமளா, இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.