உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் உருவாக்கம்; தலைமை அலுவலகத்தில் முடங்கிய கோப்பு

புதிய இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் உருவாக்கம்; தலைமை அலுவலகத்தில் முடங்கிய கோப்பு

கடலுார் : தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2011ம் ஆண்டு 1,095 நேரடி தேர்வு மூலம் எஸ்.ஐ.,க்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்கள் 2011ல் பயிற்சி முடித்து, வெவ்வேறு இடங்களில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளாக எஸ்.ஐ.,களாக உள்ளனர்.கடந்த ஆட்சி காலத்தில் கொரோனா தொற்றை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என உயர்த்தியதாலும், காவல் துறையின் நிர்வாக குறைபாடு காரணமாகவும், பதவி உயர்வு அளிப்பதில் சிக்கல்கள் தொடர்கிறது.அரசு இதனை கவனத்தில் கொண்டு, எஸ்.ஐ., நிலையில் உள்ள 280 காவல் நிலையங்களை இன்ஸ்பெக்டர் நிலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது அதன்பேரில் தான் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், காவல் துறை மானிய கோரிக்கையின் போது, 110 விதியின் கீழ் 'சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும் அன்றாட அவசர நிலைகளை கையாளவும் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் 280 காவல் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதன் மூலம் சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்களாக மாற்றப்படும்.இதனால் தமிழகத்தில் விரைவாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரித்து நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, ஜாதி, வகுப்புவாத பிரச்னைகளைக் கட்டுப்படுத்த முடியும்' என 27வது அறிவிப்பாக முதல்வர் வெளியிட்டார்.அந்த அறிவிப்புடன் சேர்த்து வெளியிட்ட, போலீசார் பதவி உயர்வு, மகளிர் போலீசார் திருமண உதவித்தொகை போன்ற பல அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு, அவை செயல்பாட்டிற்கும் வந்துவிட்டன.ஆனால் 280 காவல் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் உருவாக்கம் செய்யும் அறிவிப்பிற்கு மட்டும் அரசாணை வெளியிடவில்லை. முதல்வர் அறிவித்து 2 மாதங்களாகியும் இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் உருவாக்கம் கோப்பு இன்னும் 'மூவ்'ஆகவில்லை.முதல்வர் அறிவிப்பை நம்பி, நமக்கும் பதவி உயர்வு வந்து விடும் என பட்டியலில் உள்ள 500 சீனியர் எஸ்.ஐ.,கள் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் இது நாள் வரை எதுவும் நடக்காததால், அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அரசாணை வழங்க உள்துறை செயலகமும், காவல் துறை உயர் அதிகாரிகளும் தயாராக இருந்த போதும், காவல் துறை தலைமை அலுவலக பணியாளர்கள் மெத்தனத்தால் அரசாணை வெளியிடப்படாத அவலம் ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தில் உள்ள 500 சீனியர் எஸ்.ஐ.,கள் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை