உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு கழிவுகள் வெடித்து தீ விபத்தால் பரபரப்பு

பட்டாசு கழிவுகள் வெடித்து தீ விபத்தால் பரபரப்பு

அரியாங்குப்பம்: ஆற்றங்கரையோர பகுதியில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகள் வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், இருசாம்பாளையம் அருகே உள்ள நல்லப்பரெட்டிப்பாளையம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோனில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பட்டாசு கழிவுகளை, சங்கராபரணி ஆற்றன் கரையோர பகுதி தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென ஆற்றன் கரையோர பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன் அப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. கிராம மக்கள் பதட்டத்துடன் வெளியே ஓடி வந்து பார்த்தபோது, பட்டாசு கழிவுகளில் இருந்த வெடி மருந்துகள் வெடித்து தீப்பிடித்து எரிந்ததை உணர்ந்து நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக, கடலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஏற்பட்ட மழை துாரலில், பட்டாசு கழிவுகளில் இருக்கும் சோடியம் என்ற வேதிப்பொருட்கள் மூலம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, புதுக்குப்பம் ஊராட்சி வி.ஏ.ஓ., ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, பட்டாசு கழிவுகளை கொட்டிய தொழிற்சாலை உரிமையாளரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !