மின் நிலையங்களை சூழ்ந்த வெள்ளம் புதுச்சேரி முழுதும் இருளில் மூழ்கியது
புதுச்சேரி : பெஞ்சல் புயல், கரையை கடந்ததை தொடர்ந்து கொட்டித் தீர்த்த கன மழையால், புதுச்சேரியில் உள்ள 15 துணை மின் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்து, வீடுகளுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது. நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. நகரம் முழுதும் போக்குவரத்து முடங்கியது.இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. நகரில் நேற்று முன்தினம் 2:00 மணி முதல் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகரமே இருளில் சூழ்கியது.இரவு முழுதும் புயல் கரையை கடந்ததால் மின் இணைப்பு கொடுக்கவில்லை. புயலில் மரங்கள், மின் கம்பங்கள், கம்பிகள் அறுந்து விழுந்தாலும், அவற்றை உடனே சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை மின் நிலையங்களையும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால், மின் இணைப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மின் துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் உள்ள 15 துணை மின் நிலையங்களையும், வெள்ளம் சூழ்ந்து வடியாததால், உடனே மின்சாரம் வழங்க முடியவில்லை. வெங்கட்டா நகர், மரப்பாலம், பாகூர் துணை மின்நிலையம் உள்ளிட்ட முக்கிய துணை நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் கொடுக்கவில்லை.புற நகர் பகுதியை பொருத்தவரை மரங்கள் விழுந்து 300 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சரி செய்து, மின் இணைப்பு கொடுக்க முயற்சி எடுத்து வருகிறோம்' என்றனர்.
விரைவில் மின் வினியோகம்
அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகர பகுதியில் மின் இணைப்பு உடனடியாக கொடுக்கவில்லை. இந்த மின் நிலையம் வாயிலாக 80 சதவீத நகர பகுதிகள் மின்விநியோகம் பெறுகின்றன.பழுதடைந்த மின் பகிர்மான வலையமைப்பை சரிசெய்து, வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்துறை ஈடுபட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் வழங்கப்படும் என்றார்.