கனகன் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
புதுச்சேரி: கனகன் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உழவர்கரை நகராட்சிக்குட்பட கதிர்காமத்தில் அமைந்துள்ள கனகன் ஏரி நகரப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரிக் கரையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், ஓய்வு எடுக்கவும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏரியில் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை பயன்படுத்தி, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் இன்றி வறண்டு வரும் ஏரி பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் தண்ணீரில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துார்நற்றம் வீச துவங்கியுள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கனகன் ஏரிக்குள் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.