இதய நோய் சிகிச்சை தொடர் கருத்தரங்கம்
புதுச்சேரி: இந்திய மருத்துவச் சங்க புதுச்சேரி கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து இதய நோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்த தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கை புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடத்தின. இந்த கருத்தரங்கின் சிறப்பு அமர்வுகளில் முன்னணி மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சென்னை காவேரி மருத்துவமனையின் இதய மின்லியல் துறைத் தலைவர் தீப் சந்த் ராஜா, இதய செயலிழப்பு மற்றும் ஏட்ரியல் பைப்ரிலேஷன் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்து பேசினார். மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார் கிருஷ்ணசாமி, காவேரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான மற்றும் வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து கலந்துரையாடினார். புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். கருத்தரங்கினை புதுச்சேரி கிளையின் தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இக்கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் ஒரு மணி நேரம் கிரெடிட் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.