புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்... அதிகரிப்பு:தனியார் பள்ளி மாணவர்கள் 98.57 பெற்று அசத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 7,497 தனியார் பள்ளி மாணவர்களில், 7,390 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.57 ஆகும். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 3,890 மாணவர்கள், 3,607 மாணவிகள் என, மொத்தம் 7,497 பேர் எழுதினர். அதில், 3,811 மாணவர்கள், 3,579 மாணவிகள் என, மொத்தம் 7,390 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி 98.57 சதவீதமாகும். இதில், மாணவர்கள் 97.97, மாணவிகள் 99.22 சதவீதம் அடங்கும். 100 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில், 7,564 மாணவர்கள் தேர்வு எழுதி, 7,453 பேர் தேர்ச்சி பெற்று 98.53 சதவீதம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 04 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால், தற்போது, தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).