கார்னிவல் கலை நிகழ்ச்சி அமைச்சர் துவக்கி வைப்பு
காரைக்கால்: காரைக்கால் கார்னிவல் விழாவையொட்டி, சாலையோர கலை நிகழ்ச்சியை அமைச்சர் திருமுருகன் தொடங்கி வைத்தார். காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத் துறை, வேளாண் துறை ஆகியன சார்பில், கார்னிவல் விழா நேற்று துவங்கியது. கலாசார சாலையோர கலை நிகழ்ச்சியை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., கலெக்டர் ரவிபிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின், குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., அமர்ந்திருக்க, வண்டியை கலெக்டர் ரவிபிரகாஷ் இயக்கினார். அலங்கார வாகனங்களில் கலைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பல்வேறு வேடம் அணிந்து, இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று, சாலைபாதுகாப்பு, பொம்மலாட்டம், மின்துறை, விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக நாட்டுப்புற கலைகள் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கேரளா மாநில கலைஞர்கள் பாரம்பரிய உடையுடன் நடன நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சி ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் துவங்கி, கிழக்கு புறவழிச் சாலையில் உள்ள உள்விளையட்டு அரங்கத்தை சென்றடைந்தது. சீனியர் எஸ்.பி.,லட்சுமி சவுஜன்யா தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.