உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுபான்மையினர் கல்லுாரி வழக்கு தள்ளுபடி மருத்துவ மாணவர்கள் சிக்கல் தீர்ந்தது

சிறுபான்மையினர் கல்லுாரி வழக்கு தள்ளுபடி மருத்துவ மாணவர்கள் சிக்கல் தீர்ந்தது

புதுச்சேரி : முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இட விவகாரத்தில் சிறுபான்மையினர் கல்லுாரி தொடுத்த வழக்கினை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால், சென்டாக் மருத்துவ மாணவர்களுக்கு சிக்கல் தீர்ந்தது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் காலியாக எம்.டி., எம்.எஸ். இடங்களுக்கு சென்டாக் கடந்த 26ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்தது. அரசு மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டது. பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக-31, நிர்வாக இடங்களுக்கு 4 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. மணக்குள விநாயகர் கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு-61, நிர்வாக இடங்களுக்கு- 60 மாணவர்களுக்கும், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் -64, நிர்வாக இடங்களுக்கு -4 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இம்மாணவர்கள் நவ., 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை சீட் கிடைத்த கல்லுாரியில் சேர அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி சீட் கிடைத்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முற்பட்டபோது, ஒரு சிறுபான்மையினருக்கான கல்லுாரியில் மட்டும் மாணவர்களை சேர்க்கவில்லை.இதனை கண்டித்து மாணவர்கள் சென்டாக்கில் திரண்டு புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறுபான்மையினர் கல்லுாரி 50 சதவீத இடங்களை தர மறுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி விவேக்குமார் சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அக்கல்லுாரியின் மனுவினை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார். இதன் மூலம் சிறுபான்மையினர் கல்லுாரியில் சேர்க்கை பெற்ற 64 மாணவர்களுக்கு சிக்கல் தீர்ந்தது.

பெற்றோர் சங்கம் நன்றி

இது குறித்து பெற்றோர் மாணவர் சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவினால் 64 மாணவர்களின் சேர்க்கை உறுதியாகி உள்ளது. இதற்கு துணையாக இருந்த கவர்னர், முதல்வர், தலைமை செயலர், சுகாதார செயலர், சட்டத் துறை செயலர், சார்பு செயலர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி