| ADDED : டிச 06, 2025 05:09 AM
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார். புதுச்சேரி நகராட்சி அலுவலகம் மேரி ஹாலில் நடந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நினைவு தின நிகழ்ச்சியில், பங்கேற்றவர் கூறியதாவது; போலி மருந்து விவகாரம் தொடர்பாக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க கூடாது. என் தொகுதியில் போலி மருந்து தொழிற்சாலை இருந்திருந்தால், அந்த தொழிற்சாலையை கொளுத்தி இருப்பேன். நான் நிச்சயம் ஊசுடு தொகுதியில் தான் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். எனது மனைவி திருபுவனை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை செய்து வருகிறார். அவரும் பா.ஜ.,வில் போட்டியிடுவார். வேறு கட்சியில் போட்டியிட மாட்டார். எனது தலைவர் பிரதமர் மோடி உத்தரவிட்டால், எங்கு வேண்டுமானாலும் நிற்பேன். வரும் 14ம் தேதி டில்லிக்கு சென்று, அமித்ஷாவையும், மத்திய உள்துறை செயலர் கோவிந்தமோகன் ஆகியோரை சந்திக்க உள்ளேன்' என்றார்.