ஏர்போர்ட் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் சுற்றித்திரியும் பசு மாடுகளால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துள்ளாகி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை நகரின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது. அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஏர்போர்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதற்கிடையே, சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகளின் விளம்பர பலகைகள் காரணமாக சாலை குறுகலாகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக 10க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையை அடைத்தப்படி போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரிந்து வருவதுடன், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை வழிமறித்து, அதிலுள்ள பொருட்களை பிடிங்கி சேதப்படுத்துகின்றன. மேலும், சாலைகளின் நடுவே சண்டையிட்டு கொள்ளும் மாடுகள், வாகன ஓட்டிகள் மீதும் மோதுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு, வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உழவர்கரை நகராட்சி, ஏர்போர்ட் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரியும் பசு மாடுகளை பிடித்து, உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.