புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி முறிவு?
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “வரும் சட்டசபை தேர்தலில் 15க்கு 15 என்ற பங்கீடாக 30 தொகுதிகளில் நாம் போட்டியிடலாம்,” என்றார். இதை கேட்ட முதல்வர் ரங்கசாமி, “கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 16 தொகுதிகளில் போட்டியிட்டோம். நீங்கள் ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். அதிமுக ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது இப்போது 15 தொகுதிகளை கேட்கிறீர்கள். நாங்கள் போட்டியிட்ட 16 தொகுதிகள் முழுதும் எங்களுக்கு வேண்டும்,” என, தெரிவித்தார். தொடர்ந்து ரங்கசாமி கூறுகையில், “மத்தியில் இணக்கமான ஆட்சி நடக்கும் நிலையில், தேர்தலுக்கு முன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக உள்ளோம்,” என்றார். இதை கேட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, “இந்த விவகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு மீண்டும் எடுத்து செல்கிறேன். இதுதவிர, ஜோஸ் சார்லசின் லட்சிய ஜனநாயக கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க வேண்டும்,” என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரங்கசாமி, “சூதாட்டம் போன்ற வணிக நோக்கத்துடன் வரும் யாரையும் புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொண்டது இல்லை. எனவே, அக்கட்சியை இணைப்பது என்பது உங்கள் முடிவு; நாங்கள் ஏற்கவில்லை,” என குறிப்பிட்டார். இதற்கிடையே, கூட்டணி பேச்சு தொடர்பாக அமைக்கப்பட்ட இரு தரப்பு குழுக்கள் சந்தித்து பேசின. அப்போது ல.ஜ.க.,வை கூட்டணியில் இணைப்பது குறித்து மீண்டும் சர்ச்சை வெடித்தது. 'தேவையானால், கூட்டணியை விட்டு வெளியேறலாம ் ' என என்.ஆர்.காங்.,கிடம் பா.ஜ., தரப்பில் கூறினர். 'அதை நீங்களே அறிவியுங்கள்' எனக்கூறி என்.ஆர்.காங்., தரப்பினர் வெளியேறினர். இதனால், என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.