சாலையை சீரமைக்க கோரி நுாதன போராட்டம்
புதுச்சேரி: குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தினர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நுாதன போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, மாநில செயலாளர் எழிலன் தலைமை தாங்கினார். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. இங்கு சாலை போக்குவரத்தில் பிரதானமாக உள்ளது. ஆனால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி தலை, கை, கால்களில் காய கட்டுகளுடன் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.