புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டத்தினை பின்பற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுதேர்வு துவங்கியது. புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறிவிட்டன. தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்னும் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வினை எழுதி வருகின்றன. தமிழ்நாடு பாடத்திட்டத்தினை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடங்களுடன் நேற்று துவங்கியது. புதுச்சேரி பகுதியில் 20 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 5 மையங்களிலும் தேர்வு நடத்தப்பட்டது. புதுச்சேரி பிராந்தியத்தில் தமிழ், பிரெஞ்சு, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களுக்காக மொத்தம் 6,914 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 6,894 மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 19 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. ஒரு மாற்று திறனாளி மாணவருக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. பாடவாரியாக தமிழ்- 99.82 சதவீதம், பிரெஞ்சு-99.51, ஹிந்தி-98.08, சமஸ்கிருதம்-100 சதவீத மாணவர்கள் வருகை தந்து தேர்வு எழுதி இருந்தனர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரி பிராந்தியத்தில் 99.73 சதவீதம் மாணவர்கள் பிளஸ் 2 மொழிப்பாட தேர்வினை எழுதினர். காரைக்கால் பிராந்தியத்தில் தேர்வு எழுத மொத்தம் 676 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 663 பேர் தேர்வில் பங்கேற்றனர், 13 பேர் தேர்வுக்கு வரவில்லை. இப்பிராந்தியத்தில் ஒட்டுமொத்த வருகை பதிவு 98.08 சதவீதமாகும். தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், தேர்வுகளை முறையாக நடத்தவும் 5 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இரு பிராந்தியங்களிலும் முதல் நாள் தேர்வு எவ்வித தடையுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 26ம் தேதி வரை தொடர்ந்து பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வினை புதுச்சேரி பிராந்தியத்தில் 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6970 மாணவர்களும், 173 தனித் தேர்வர்களும் எழுத விண்ணப்பித்துள்ளனர். காரைக்கால் பகுதியில் 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 பள்ளி மாணவர்கள், 112 தனித் தேர்வர்கள் எழுத விண்ணப்பித்துள்ளனர். வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.