அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செந்தமிழ் செல்வி தொகுத்து வழங்கினார். இதில், கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி, நடந்த மண்டல அளவிலான குழு நடனம், நாடகம், வினாடி வினா ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பின், பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, பாரதியின் புகழ் பாடும் பாடல் மற்றும் பட்டிமன்றம் நடந்தது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வேலவன், சபரிநாதன், நித்தில வள்ளி, பூவிழி, சங்கரி, விஸ்வ பிரியா, ஸ்ரீமதி, சுகந்தி, ஓம் சாந்தி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, நிஷாந்தி, சுமதி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் ரேணு நன்றி கூறினார்.