பொறியியல் கலந்தாய்வை உடனே நடத்த கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியில் பொறியியல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி முடிக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் அனைத்து பொறியியல் கலந்தாய்வையும் வரும் 14ம் தேதிக்குள் முடித்து ஒருவார காலத்துக்குள் இன்டெக்ஷன் புரோகிராம் வகுப்பு நடத்தி, மாணவர்களின் பட்டியலை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஒருவாரத்திற்குள் பதிவு செய்யவில்லை என்றால் மாணவர் சேர்க்கை அங்கீகரிக்கப்படாது. மேலும்,அனைத்து மாநிலத்திலும் பொறியியல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு,முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ள மாணவர் சேர்க்கைகான கடைசி நாள், 4 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இறுதிகட்ட தரவரிசை பட்டியல் மற்றும் முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்களின் பொறியியல் கல்வி கேள்வி குறியாகி உள்ளது. எனவே, கவர்னர், முதல்வர்உடனடியாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் சிறப்பு அனுமதி பெற்று கலந்தாய்வை நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.