25 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு துணை ஜனாதிபதியிடம் கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி பல்கழைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாண வர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள துணை ஜனாதிபதியிடம் சமூக அமைப்புகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.சந்திப்பின் போது, புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 21 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற படிப்புகளுக்கு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் 78 படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் நான்கு புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களின் அகில இந்திய அளவில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போல், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மீதமுள்ள 61 படிப்புகளுக்கும் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும். இவ்வறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் நேரு எம்.எல்.ஏ., பேராசிரியர் ராமானுஜம், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகன்நாதன், புதுச்சேரி தன்னுரிமை கழகத் தலைவர் சடகோபன், விடுதலை வேங்கை தலைவர் மங்கையர்செல்வம், வழக்கறிஞர் அணி தலைவர் குமரன், தேசிய இளைஞர் திட்டத்தலைவர் ஆதவன், புதுவை மக்கள் தமிழ்ச்சங்க தலைவர் சரவணன், வழக்கறிஞர் தினேஷ், சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.