உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தரமற்ற மருந்து கொள்முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கைது

தரமற்ற மருந்து கொள்முதல் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கைது

புதுச்சேரி: தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்த வழக்கில், சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்கள் உட்பட ஆறு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி சுகாதார துறையில் தரமற்ற மருந்துகள் வாங்கி, அரசுக்கு, 2.5 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சுகாதார துறை சிறப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா புகாரில், 2023ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து, மருந்தாளுநர் நடராஜன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், நடராஜன், அவரது மனைவி புனிதா பங்குதாரராக உள்ள சாய்ராம் ஏஜென்சி, நடராஜனின் நண்பர் பெயரில் உள்ள பத்மஜோதி ஏஜென்சி ஆகிய இரு கம்பெனிகளை போலியாக உருவாக்கி, மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசுக்கு, 2.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. அதன்படி, இவ்வழக்கு தொடர்பாக, சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார், முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி, சாய்ராம் ஏஜென்சி பங்குதாரர்களான நடராஜன் மனைவி புனிதா, நந்தகுமார், பத்மஜோதி ஏஜென்சி உரிமையாளர் மோகன் ஆகிய ஆறு பேரை, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களில், அல்லி ராணியை தவிர்த்து, மற்ற ஐந்து பேரையும், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மோகன் உத்தரவிட்டார். அல்லிராணி மருத்துவ சான்று அடிப்படையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மற்ற ஐந்து பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை