சமூக வல்லுநர்கள், வள நபர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு
புதுச்சேரி: சமூக வல்லுநர்கள், சமூக வள நபர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகுப்பூதியதிற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநர்கள், சமூக வள நபர்கள் ஆகியோருக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார்.அதன் அடிப்படையில், சமூக வல்லுநர்களுக்கான தொகுப்பூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும், சமூக வள நபர்களுக்கான தொகுப்பூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 13,500 ரூபாயாகவும், ஜென்டர் சமூக வள நபர்களுக்கான தொகுப்பூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.இதன் மூலம் 261 சமூக வல்லுநர்களும், 46 சமூக வள நபர்கள் பயன் பெற உள்ளனர்.இதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கலெக்டர் குலோத்துங்கன் கலந்து கொண்டனர்.