உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எரிசக்தி கலவை, வாய்ப்புகளும் சவால்களும் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம்

எரிசக்தி கலவை, வாய்ப்புகளும் சவால்களும் மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம்

புதுச்சேரி: ‘2047ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எரிசக்திக் கலவை, வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பிலான மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் நடந்தது. பெங்களூரு விச்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணைந்து, “2047-ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எரிசக்திக் கலவை, வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில், மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கம் 2026, புதுச்சேரி கால்வே கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மோகன் குமார், இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சிறப்பு அழைப்பாளராக விச்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சிய கல்வி அலுவலர் பிஸ்வால் கலந்து கொண்டார். இதில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகே பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட 11 அறிவியல் விளக்க காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சூரிய மற்றும் காற்றாலை எரிசக்தி, அணுசக்தி, பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் தங்களது ஆய்வுகள் மற்றும் கருத்துகளை எடுத்துரைத்தனர். தாகூர் கலைக் கல்லுாரி மற்றும் பாரதிதாசன் கல்லுாரியைச் சேர்ந்த நடுவர்களால், மாணவர்களின் அறிவியல் விளக்கக் காட்சிகள், மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த படைப்புகளை சமர்பித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தேர்வான ஒரு மாணவர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சார்பில், தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்கும் வாயப்பினை பெற்றுள்ளார். கருத்தரங்கினை, கால்வே கல்லுாரி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான சித்ரா தலைமையிலான ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை