சமூக, சாதி மோதலை ஊக்குவிப்பதை கை விட வேண்டும்: கவர்னர் ரவி அறிவுரை
புதுச்சேரி: அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கும் மதச்சார்பின்மையை ஊக்குவித்து, சமூக மற்றும் சாதி மோதலை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தை கைவிட வேண்டும் என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.புதுச்சேரி, அரவிந்தர் சொசைட்டியில் இலக்கிய திருவிழா - 2024, நேற்று துவங்கியது. விழாவை துவக்கி வைத்த தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: கடந்த, 10 ஆண்டுகளில் நம் நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டுமொத்த உலகமும் அங்கீகரித்துள்ளது. உலகமே நம் நாட்டின் திறனை ஒப்புக்கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் மட்டுமின்றி, அறிவியல் தொழில்நுட்பத்திலும் நம் தேசம் முன்னேறியுள்ளது. இந்த சாதனைகள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பால் சாத்தியமாகி உள்ளது. பொருளாதார முன்னணியில் பாரதத்தின் எழுச்சியுடன், நாடு ஆன்மிக விழிப்புணர்வை காண்கிறது. இது நாட்டின் முக்கிய பலம். நாட்டின் தனித்துவமான ஆன்மிகக் கருத்தை அழிக்க கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.சுதந்திரத்திற்கு பின் தலைமைக்கு வந்தவர்களும், பாரத சக்தியைக் குழி தோண்டி புதைக்க முயன்றனர். நமது தனித்துவமான ஆன்மிக வலிமையை மீட்டெடுக்கும் தெய்வீக கடமை நமக்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் இங்கும் உள்ளனர். அவர்கள் எதிர்மறையான கற்பனையை உருவாக்குகின்றனர். பொதுமக்களின் நம்பிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றனர்.அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கும் மதச்சார்பின்மையை நாம் ஊக்குவிக்க வேண்டும். சமூக மற்றும் சாதி மோதலை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தை நாம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.