ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி; டீக்கடை உரிமையாளர் கைது
புதுச்சேரி : ஜிப்மரில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாக 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் பணி நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. உறுவையாறு தேனீ ஜெயக்குமார் நகரை சேர்ந்த முரளிதரன் என்பவர் தன் தங்கைக்கு செவிலியர் பணி தேடி வந்தார்.அவருக்கு ரத்னா தியேட்டர் எதிரில் லே போர்த் வீதியில் டீக்கடை நடத்தி வந்த ராஜ்குமார், 45; என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ராஜ்குமார் தனக்கு ஜிப்மரில் உயர் அதிகாரிகள் தெரியும். ஆதனால், செவிலியர் வேலையை வாங்கிவிடலாம் என, கூறினார். அதைநம்பி முரளிதரன் ஜிப்மரில் தனது தங்கைக்கு செவிலியர் பணி வாங்கி தரும்படி ரூ. 13 லட்சம் பேரம் பேசி, 5 லட்சம் அட்வான்ஸ் தொகை வழங்கினார். முரளிதரனை தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து ராஜ்குமாரிடம் ஜிப்மரில் வேலை வாங்கி தர சொல்லி மொத்தம் ரூ.25 லட்சம் கொடுத்தனர்.அக்., மாதம் ஜிப்மர் செவிலியர் வேலை முடிவுகள் வெளியானது. அதில், பணம் வாங்கப்பட்ட ஆறு பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. பணம் கொடுத்தவர்கள் திருப்பித் தரக்கோரி வலியுறுத்தியபோது, ராஜ்குமார் ஏமாற்றி வந்ததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ராஜ்குமாரை கைது செய்து நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.