சாலையில் தடுப்பு சுவர் வேண்டி இரு கிராம மக்கள் சாலை மறியல்
கண்டமங்கலம் : நவமால்காப்பேர் - பங்கூர் நான்குமுனை சந்திப்பில் விபத்துகளை தடுக்க, சாலை நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வலியறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம்- புதுச்சேரி சாலையில் 3 கி.மீ., தொலைவில் தமிழக-புதுச்சேரி எல்லைப்பகுதியான நவமால்காப்பேர்-பங்கூர் கிராமங்கள் அமைந்துள்ளது.இங்குள்ள நான்குமுனை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இதனால் இங்குள்ள நான்குமுனை சந்திப்பு பஸ் நிறுத்தம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில் நான்குமுனை சந்திப்பில், சாலை நடுவே தடுப்புச்சுவர் இல்லாததால், சாலையை கடக்கும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.இதனால், விபத்துகளை தடுக்க சாலை நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தி நேற்று மாலை 4;00 மணிக்கு இரு கிராம மக்கள் நவமால்காப்பேர்-பங்கூர் நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.மறியலில் ஈடுபட்டவர்களிடம் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார், சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மாலை 5:00 மணிக்கு கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.