| ADDED : மார் 04, 2026 04:57 AM
புதுச்சேரி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசுத் துறை மற்றும் கார்பரேட் கொள்முதல் முறைகளில் அதிக அளவில் பங்கேற்கும் வகையில், விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் தினேஷ் பாபு வரவேற்றார். பேராசிரியர் சமித் குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அகமதாபாத் மற்றும் பிப்டிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு கொள்முதல் தளங்களுடன் நேரடி தொடர்பில் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு இ மார்க்கெட் தளத்தின் வணிக ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு அமர்வில், ஜி.இ.எம்., தளத்தில் பதிவு செய்வது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பட்டியலிடுவது, டெண்டர் செயல் முறைகள் மற்றும் அரசு மின் கொள்முதல் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து 205 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்றன. மூத்த திட்ட அலுவலர் விக்னேஷ், திட்ட அலுவலர் தர்ஷிணி, ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.