உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிழல் தராத கீற்று கொட்டகை இருந்தென்ன பயன் மணப்பட்டு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அவதி

நிழல் தராத கீற்று கொட்டகை இருந்தென்ன பயன் மணப்பட்டு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அவதி

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அடுத்துள்ள மணப்பட்டு மூ.புதுக்குப்பம் கடற்கரை, மத்திய அரசின் சுற்றுலா திட்டத்தில் மேம்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உணவு விடுதிகள், ஓய்வு அறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டது. பணிகள் முடிவடையாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் உள்ளன.ஆனாலும் கூட, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இக்கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்காக சுட்டெரிக்கும் கடற்கரை மணல் பரப்பில், பெரிய அளவில் இரண்டும், ஆங்காங்கே சிறிய அளவிலும் கீற்று குடில்கள் மற்றும் உயரமான வாட்ச் டவர்களும் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், கீற்று குடில்களுக்குள் அமர்ந்து குளிர்ச்சியை அனுபவித்தபடி, கடற்கரை அழகை ரசித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் கடற்கரையில் தெற்கு பகுதியில் இருந்த பெரிய அளவிலான குடில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும், ஆங்காங்கே இருந்த சிறிய அளவிலான கீற்று குடில்களும் வெயில், மழை மற்றும் காற்றில் சேதமாகி காணாமல் போனது.தற்போது, மீதமுள்ள ஒரு கீற்று குடிலிலும், மக்கி ஓட்டை விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது, கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க நிழல் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, மணப்பட்டு மூ.புதுக்குப்பம் கடற்கரையில், கீற்று குடில்கள் அமைத்திட சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி