ஆஸ்திரேலிய பார்முலா-1: சாதிப்பாரா வெர்ஸ்டாப்பன்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய 'பார்முலா-1' கார்பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் மீண்டும் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' உலக சாம்பியன்ஷிப் கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடக்கிறது. இதன் முதல் சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று துவங்குகிறது. இதில் மெக்லாரன்-மெர்சிடஸ், பெராரி, ரெட் புல் ரேசிங்-ஹோண்டா, மெர்சிடஸ், வில்லியம்ஸ்-மெர்சிடஸ் உள்ளிட்ட 10 அணிகளை சேர்ந்த உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.கடந்த சீசனில் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தொடர்ச்சியாக 4வது முறையாக (2021-2024) வென்ற, ரெட் புல் ரேசிங்-ஹோண்டா அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மீண்டும் சாதிக்க காத்திருக்கிறார்.ஏழு முறை (2008, 2014-15, 17-2020) உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, மைக்கேல் சூமேக்கர் (ஜெர்மனி) சாதனையை சமன் செய்த பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன், மெர்சிடஸ் அணியில் இருந்து விலகி, இம்முறை பெராரி அணிக்காக களமிறங்குகிறார்.இவர்களை தவிர, லாண்டோ நோரிஸ் (பிரிட்டன்), 'நடப்பு ஆஸி., பார்முலா-1 சாம்பியன்' கார்லஸ் சைன்ஸ் ஜூனியர் (ஸ்பெயின்), சார்லஸ் லெக்லெர்க் (மொனாகோ), பெர்ணான்டோ அலோன்சோ (ஸ்பெயின்) உள்ளிட்டோரும் பல்வேறு அணிகள் சார்பில் பங்கேற்கின்றனர்.இரண்டு பயிற்சி போட்டிக்கு பின், நாளை தகுதிச் சுற்று நடக்கிறது. மார்ச் 16ல் இறுதிச் சுற்று நடக்கவுள்ளது.