உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் குப்பை லாரிகளால் விபத்து அபாயம்

 நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் குப்பை லாரிகளால் விபத்து அபாயம்

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் குப்பை லாரிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையைச் சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையில், கொளத்துார் பகுதியிலுள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில், தாம்பரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது. குப்பை கொட்டியதும் அந்த டாரஸ் லாரிகள், அதே பகுதி சாலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, சக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை தொடர்கிறது. எனவே, இப்பகுதியில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணுகு சாலையில் நிறுத்தலாம் வாகன ஓட்டிகள் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், கொளத்துார் பகுதியில் குப்பை லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், குப்பைக் கிடங்கில் இருந்து வெளிவரும் லாரிகள், சாலை சந்திப்பில் திரும்பும் வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், குப்பை லாரிகளை அருகில் உள்ள அணுகுசாலையில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ