உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொளத்துார் கிடங்கில் பையோ மைனிங் செய்யப்பட்ட குப்பை... தேக்கம் : வனப்பகுதி, நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு

கொளத்துார் கிடங்கில் பையோ மைனிங் செய்யப்பட்ட குப்பை... தேக்கம் : வனப்பகுதி, நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு

மறைமலை நகர்:கொளத்துார் குப்பைக் கிடங்கில்,'பயோ மைனிங்' முறையில் பிரிக்கப்பட்ட குப்பை தேக்கமடைந்து உள்ளதால், வனப்பகுதி மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும், 520 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை அனைத்தும்,'டாரஸ்' லாரிகள் மூலமாக காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் உள்ள, 44 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2019ம் ஆண்டு முதல் கொட்டப்பட்டு வருகிறது. காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையும், இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அந்த வகையில் தினமும், 70 முதல் 120 டாரஸ் லாரிகளில், குப்பை கொண்டு வந்து கொட்டப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருவதால், தற்போது இங்கு மலை போல குப்பை குவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்., மாதம், தாம்பரம் மாநகராட்சி சார்பில், 35.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,'பயோ மைனிங்' முறையில் குப்பையை தரம் பிரித்து, அரைத்து அப்புறப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டன. குப்பையில் உள்ள பழைய துணி, கண்ணாடி துகள்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை பிரிக்கப்பட்டு, மீதமுள்ள பொருட்களில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஏழு மாதங்களில், 2,000 டன் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, திருச்சி, டால்மியாபுரம் பகுதியில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு, லாரிகளில் பிளாஸ்டிக் குப்பை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இயற்கை உரம் உள்ளிட்ட குப்பை, கிடங்கில் இருந்து வெளியேற்றப்படாமல், அதே பகுதியில் மலை போல தேக்கமடைந்துள்ளது. மழை பெய்யும் போது, இந்த குவியல் நனைந்து, அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுற்றியுள்ள வனப்பகுதி, கொளத்துார் ஏரிகளில் நேரடியாக கலந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, தேக்கமடைந்துள்ள தரம் பிரிக்கப்பட்ட குப்பையை அகற்றவும், சுத்திகரிப்பு செய்யப்படாமல் உள்ள குப்பையை துரிதமாக 'பையோ மைனிங்' செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பை லாரிகளால் அச்சம் குப்பை ஏற்றி வரும் டாரஸ் லாரிகள், வரிசையாக ஸ்ரீ பெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுவதால், மற்ற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. மேலும், குப்பை கொட்டி விட்டு வரும் லாரிகளில், கடைசியாக உள்ள குப்பையை, லாரி டிரைவர்கள் சாலையில் கொட்டிவிட்டுச் செல்வதால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த பிரச்னைகளை சரிசெய்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.ஆனந்தன், சிங்கபெருமாள் கோவில். நிலத்தடி நீர் பாதிப்பு கொளத்துார் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பகுதியைச் சுற்றி, 750 ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் மற்றும் முக்கிய ஏரிகள், நீர்வழித்தடங்கள் உள்ளன. குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், கொளத்துார் ஏரி முழுதும் கழிவுநீராக மாறி கொளத்துார், திருக்கச்சூர், பனங்கொட்டூர், சட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இங்கு நடைபெறும் விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை என, இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை