உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மையத்தடுப்பில் காய்ந்த மரங்கள் ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து அபாயம்

மையத்தடுப்பில் காய்ந்த மரங்கள் ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து அபாயம்

மறைமலை நகர், புறநகர் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள காய்ந்த மரங்களால் விபத்து அபாயம் உள்ளதால், மரங்களை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி., சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இதில் கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இந்த சாலையின் மையப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேப்பமரம், காட்டுவாகை மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புலிப்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், தைலாவரம் உள்ளிட்ட பல இடங்களில், சாலை மையத்தடுப்பில், காய்ந்த மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்கள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால், திடீரென முறிந்து சாலையில் விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், காய்ந்த நிலையிலுள்ள மரங்களை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ