உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.ஹெச்.,சில் அமைச்சர் விசிட் அலட்சிய டீன் அதிரடி இடமாற்றம்

ஜி.ஹெச்.,சில் அமைச்சர் விசிட் அலட்சிய டீன் அதிரடி இடமாற்றம்

செங்கல்பட்டு;அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை மருத்துவரை, அதிரடியாக இடம் மாற்றம் செய்து, அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், பிற ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததாகவும், நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று காலை 8:00 மணிக்கு திடீரென மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். புற நோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, மருந்து இருப்பு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். நோயாளிகளிடமும் விசாரித்த அவர், 'தலைமை டாக்டர் ஏன் இதுவரை வரவில்லை' என, பிற ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான புது கட்டடத்தை பார்வையிட்டார்.கட்டடத்தின் பல பகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. அதன், முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் பராமரிக்கப்படாமல் மூடப்பட்டிருந்ததால், துாசு படிந்திருந்தது. மேலும், புது கட்டடம் குறித்து கல்வெட்டும் வைக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அமைச்சர் சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை மருத்துவர் ஜோன் ஜெலிசித்தாவை, அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ