செங்கை மருத்துவமனையில் அச்சம் புறக்காவல் நிலையம் அவசியம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளன. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.இதுமட்டுமின்றி, உள்நோயாளிகளாக, 1,700க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நோயாளிகளின் உறவினர்களின் இருசக்கர வாகனங்கள், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.இவற்றை, மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். அந்த வகையில், தினமும் வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றன.மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில், விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக தினமும் பலர் வருகின்றனர்.இவர்களுடன் வருவோரில் பலர், போதையில், அங்குள்ள மருத்துவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.இதனால், மருத்துவமனை வளாகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எனவே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு நலன் கருதி, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.