பூட்டப்பட்ட மகளிர் கழிப்பறை திறக்க பயணியர் கோரிக்கை
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள மகளிர் கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவிலில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு , இங்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர் பேருந்துகளில் செங்கல்பட்டு, தாம்பரம், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இங்கு ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகிலுள்ள வணிக வளாக கட்டடத்தில், பேருந்து பயணியர் வசதிக்காக மகளிர் கழிப்பறை கட்டப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த கழிப்பறை பூட்டப்பட்டு உள்ளதால், பெண்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: மகளிருக்கான இந்த கழிப்பறை, நான்கு மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவியர் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறந்து, பெண்களின் சிரமத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.