ஜி.எஸ்.டி., சாலையில் சாதனை விளக்க பேனர் போட்டி போட்டு வைத்துள்ள போலீசார்
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையோரம் விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. இத்துடன், சாலையை ஒட்டியுள்ள கட்டடங்கள் மீதும், ராட்சத பேனர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.இவை காற்றில் அசைந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், கவனச்சிதறல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போட்டி போட்டு விளம்பர பேனர்கள் வைக்கும் நிலையில், தற்போது தாம்பரம் மாநகர போலீசாரும், சாதனை விளக்க பேனர் வைத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை -- அனுமந்தபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில், இந்த சாதனை விளக்க பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:முக்கிய சந்திப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில், தாம்பரம் மாநகர போலீசாரின் நான்காண்டு கால சாதனையை விளக்கும் வகையில், தற்போது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.பொது இடங்களில் பேனர் வைப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு விதிமுறைகள் விதித்துள்ள நிலையில், அதை மீறி போலீசாரே பேனர்கள் வைத்து உள்ளனர்.தற்போது புறநகரில் மாலை நேரங்களில், பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே, பேனரால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் அனைத்து பேனர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.