தினமும் பறக்கும் கல் குவாரி லாரிகள் போரூர் கிராம சாலை கடும் சேதம்
சித்தாமூர்:அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல் குவாரி லாரிகளால், போரூர் கிராம சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது.சித்தாமூர் அருகே உள்ள போரூர் கிராமம் வழியாக, விளாங்காடு - நுகும்பல் இடையேயான 4 கி.மீ., துாரம் கொண்ட தார்ச்சாலை செல்கிறது.இந்த சாலை நுகும்பல், கொக்கரந்தாங்கல், போரூர், விளாங்காடு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இந்த சாலையை தினமும் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையின் வழியாக, விளாங்காடு பகுதியில் செயல்படும் கல் குவாரிக்கு தினமும், ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.இதனால், போரூர் செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது, சாலையில் அதிக புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அதே நேரம் மழை நேரத்தில், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சிறு சிறு விபத்துகளும் நடைபெறுகின்றன.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.