போந்துார் ஊராட்சியில் புதிதாக கழிப்பறை அமைக்க கோரிக்கை
சித்தாமூர்:போந்துார் ஊராட்சியில் பழுதடைந்துள்ள பொது கழிப்பறையை அகற்றி, புதிய கழிப்பறை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2012ம் ஆண்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் பொது சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது.இதை, கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். சரியான பராமரிப்பு இல்லாததால் பொது கழிப்பறை சேதமடைந்தது.இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக, கிராமத்தினர் இந்த கழிப்பறையை பயன்படுத்த விருப்பம் காட்டவில்லை. இதனால், பொது கழிப்பறை வளாகம் பழுதடைந்து காணப்படுகிறது.இதனால், கிராமத்தினர் தற்போது இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்படுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய கழிப்பறையை அகற்றி, அதே இடத்தில் புதிய கழிப்பறை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.