மதுராந்தகம் - எல்லையம்மன்கோவில் பஸ் கடப்பாக்கம் வரை நீட்டிக்க கோரிக்கை
செய்யூர்;மதுராந்தகத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் 'டி-7' அரசு பேருந்தை, கடப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர். இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு பணி நிமித்தமாக செய்யூர், சித்தாமூர், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் இருந்து செய்யூர் வழியாக மதுராந்தகத்திற்கு செல்ல, போதிய அரசு பேருந்து வசதி இல்லை. இதனால் தனியார் பேருந்து அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலமாக எல்லையம்மன் கோவில் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்தில் செல்லும் நிலை உள்ளது. இதனால், பயணியருக்கு பண விரயம் மற்றும் கால விரயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், மதுராந்தகத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் 'டி-7' அரசு பேருந்தை, கடப்பாக்கம் வரை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.