அரசு மருத்துவமனையில் சாலை கடும் சேதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால், இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலையில், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இச்சாலையில் ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நோயாளிகளை தள்ளுவண்டியில் அழைத்துச் செல்ல முடியாமல், மருத்துவமனை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இச்சாலையை சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.