உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெயர்ந்துள்ள சிமென்ட் சிலாப்கள் நடைபயிற்சி செய்வோர் அவதி

பெயர்ந்துள்ள சிமென்ட் சிலாப்கள் நடைபயிற்சி செய்வோர் அவதி

வண்டலுார்: வண்டலுார் ஏரி ஓரம் உள்ள நடைமேடை சிமென்ட் 'சிலாப்'கள், பல இடங்களில் பெயர்ந்து விலகி உள்ளதால், நடைபயிற்சி செய்வோர் சிரமப்படுகின்றனர். வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம், வண்டலுார் ஏரி உள்ளது. கடந்த 1990களில், 150 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, தொடர் ஆக்கிரமிப்பால், தற்போது 80 ஏக்கராக சுருங்கி உள்ளது. கடந்த 2010ல், வண்டலுார் -- மீஞ்சூர் இடையே 62 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணி, 2,156 கோடி ரூபாயில் துவக்கப்பட்ட போது, இந்த ஏரியின் ஒரு பக்கம் 600 மீ., துாரத்திற்கு அணுகுசாலை அமைக்கப்பட்டது. பின், அணுகுசாலைக்கும் ஏரிக்கும் இடையே வடிகால் அமைக்கப்பட்டு, நடைபயிற்சிக்காக அந்த வடிகாலின் மேல், சிமென்ட் சிலாப்கள் பொருத்தப்பட்டன. இந்த சிமென்ட் சிலாப்கள் முறையாக பொருத்தப்படாததால், நாளடைவில் பிணைப்புகள் விலகத் துவங்கின. தற்போது, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சிமென்ட் சிலாப்கள் விலகி, பெரும் பள்ளங்களாக உள்ளன. இதனால், நடைபயிற்சி செய்வோர், சிமென்ட் சிலாப்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, இணைப்புகள் விலகிக் கிடக்கும் சிமென்ட் சிலாப்களை முறையாக இணைத்து, பாதுகாப்பான நடைபாதையை உருவாக்க வேண்டும் என, நடைபயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி