சித்தாமூரில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்காமல் வீண்
சித்தாமூர்: சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்காததால், வீணாகி வருகிறது. சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சித்தாமூர் பஜார் பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து கடந்தாண்டு, சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், 6 லட்சம் ரூபாயில் கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால், கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. கடந்த ஜூலையில், கழிப்பறை அருகே இருந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றினர். அப்போது, இந்த கழிப்பறையின் சுவர் சேதமடைந்தது. தற்போது, கடந்த ஐந்து மாதங்களாக இந்த சுவர் சீரமைக்கப்படவில்லை. அத்துடன், கழிப்பறையும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.