உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு: சென்னை - புதுச்சேரி இடையே சூணாம்பேடு வழியாக இயக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். சித்தாமூர் ஒன்றியத்தின் பெரிய ஊராட்சியாக சூணாம்பேடு உள்ளது. சூணாம்பேடு ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சூணாம்பேடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மணப்பாக்கம்,புதுப்பட்டு,வில்லிப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல சூணாம்பேடு பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு,தனியார் அலுவலகங்களுக்கு மதுராந்தகம்,செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி பகுதிக்கு தினசரி சென்று வருகின்றனர். சென்னையில் இருந்து மதுராந்தகம் ,சித்தாமூர், புத்திரன்கோட்டை, சூணாம்பேடு வழியாக புதுச்சேரிக்கு தடம் எண் 83 எ கொண்ட 4 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் படிப்படியாக பேருந்துகள் இயக்குவது குறைக்கப்பட்டு தற்போது 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதே போல 162 மற்றும் 83 பி பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் போதிய பேருந்து வசதி இன்றி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், கூட்ட நெரிசலில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இடவசதி இல்லாமல், நெரிசலில் சிக்கி பள்ளி,கல்லுாரி மாணவியர்,பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகிறது. குறிப்பாக புத்திரன்கோட்டை, போந்துார், நுகும்பல், பூரியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆகையால் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை