சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பால பணி வேகம்
சிங்கபெருமாள் கோவில்: சென்னை - திண்டுக்கல்தேசிய நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து உள்ளன. சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், பெருங்களத்துார் முதல்- செட்டிபுண்ணியம் வரை, எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்கும் பாதசாரிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. எனவே, இந்த பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் சிங்கபெருமாள் கோவிலில், அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகே சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இரும்பு துாண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், நடைபாதைக்கான இரும்பு துாண்களை, ராட்சத 'கிரேன்'கள் உதவியுடன் பொருத்தும் பணிகள் நடைபெற்றன. இரும்பு நடைபாதை பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் நடைமேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.