நடந்து சென்றவரை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர்கள் கைது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், நடந்து சென்றவரை தாக்கி மொபைல்போன், பணம் பறித்த வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரைச் சேர்ந்தவர் நசீர், 46. மானாமதி அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலைய சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை, திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரைச் சேர்ந்த சரவணன், 21, ஈச்சங்கரணையைச் சேர்ந்த முத்தமிழ்மாறன், 23, ஆகியோர் வழிமறித்து கடுமையாக தாக்கி, அவரிடமிருந்து 'விவோ' மொபைல் போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். தகவலறிந்து சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், நசீரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு, தலை உள்ளிட்ட பாகங்களில் 10 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட இருவரையும் நேற்று கைது செய்தனர்.