6 வயது மகனை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
பூந்தமல்லி, கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சரவணன், 34. இவர், பூந்தமல்லியை சேர்ந்த மீனாட்சி, 27, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெயகாந்த்,6, என்ற மகன் இருந்தான். கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், 2018ம் ஆண்டு கணவரை பிரிந்து மகனுடன், பூந்தமல்லியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து வசித்தார். அப்போது, தலையணையால் முகத்தில் அழுத்தி, மகனை கொலை செய்து, உடலை வீட்டின் அருகே உள்ள கால்வாயில் வீசினார். பூந்தமல்லி போலீசார், மீனாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு இரண்டாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.மகனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தாய் மீனாட்சிக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.