சட்டவிரோத பண பரிமாற்றம் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு
சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திரமல் ஜெயின், 67. இவர், சென்னையில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஹோட்டல், நகை கடை உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தி வருகிறார்.வீரேந்திரமல் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகள், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.அதன் அடிப்படையில், சென்னை, வடபழனி, துரைசாமி சாலையில் உள்ள வீரேந்திரமல் ஜெயினுக்கு சொந்தமான, 'அரிஹந்த் ஷெல்டர்ஸ்' நிறுவன அலுவலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதேபோல், வடபழனி, வ.உ.சி., பிரதான சாலையில் உள்ள அவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.மேலும், வேப்பேரியில் உள்ள அவரின் நண்பர்களான பைனான்சியர் மோகன்குமார், அசோக் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அய்யப்பன் ஆகியோர் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.