பள்ளம் தோண்டிய போது குழாய் உடைப்பு 3 நாட்களாக பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்
பொழிச்சலுார், பொழிச்சலுாரில் இருந்து கவுல்பஜாருக்கு மகாத்மா காந்தி சாலை செல்கிறது. அதிக போக்குவரத்துள்ள இச்சாலை வழியாக, கவுல்பஜார் ஊராட்சிக்கு குடிநீர் வாரிய குழாய் செல்கிறது. இக்குழாய் மூலம் வரும் தண்ணீரை, மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, கவுல்பஜார் ஊராட்சி நிர்வாகம் வினியோகிக்கிறது.இச்சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியின் போது, குடிநீர் குழாயை உடைத்து விடுவது அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில், ஆண்டாள் நகரில், பிள்ளையார் கோவில் வாசலில், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றுவதற்காக, மின்வாரியம் சார்பில், மூன்று நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டினர். அப்போது, அவ்வழியாக செல்லும் குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். குழாய் உடைந்தது தெரிந்தும், அது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், அப்படியே விட்டு சென்று விட்டனர்.இதனால், அங்கு மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்றொரு புறம், பள்ளத்தை சுற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், முதியோர், பள்ளத்தில் விழுந்து விபரீதம் ஏற்படும் சூழலும் உள்ளது.இது குறித்து அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இப்பிரச்னையில், குடிநீர் வாரிய அதிகாரிகள் தலையிட்டு, உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாக வெளியேறுவதை உடனடியாக தடுக்க வேண்டும். அலட்சியமாக பணி செய்த, மின் வாரியத்திடம் உரிய இழப்பீடு பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் கம்பத்திற்காக பள்ளம் தோண்டிய போது, குழாயை உடைத்துள்ளனர். தண்ணீர் பம்ப் செய்வதை நிறுத்தியுள்ளோம். உடைப்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.புழல்புழல் அருகே, விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், நிலத்திற்கடியில் செல்லும் குடிநீர் குழாய், நேற்று காலை திடீரென உடைந்தது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர், சாலையில் வீணாக ஓடியது.இதுகுறித்து, குடிநீர் வாரியத்திற்கு பகுதி மக்கள் புகார் செய்தனர். வழக்கம்போல் தாமதமாக வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், இரண்டு மணி நேரம் கழித்து உடைப்பை சீரமைத்தனர்.