மீன் வியாபாரி வீட்டில் 100 சவரன் கொள்ளை
மாதவரம்,மாதவரம் ஸ்ரீராம் நகர் சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான், 47; ரெட்டேரி பகுதியில், வண்ண மீன் மற்றும் மீன்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறார். தனக்கு சொந்தமான வீட்டில், உறவினர்கள் ஏழு பேருடன் வசித்து வந்தார். இடப்பற்றாக்குறை காரணமாக, வீட்டருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு பார்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வாடகைக்கு செல்ல வேண்டிய வீட்டை சுத்தப்படுத்தி விட்டு அங்கேயே தங்கியுள்ளார். நேற்று காலை அங்கு பால்காய்ச்சிவிட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கிரில் கேட் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த, 100 சவரன் நகை, 10,000 ரூபாய் காணாமல் போயிருந்தன. அதிர்ச்சியடைந்த ஷாஜகான், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் ஆராய்ந்தனர். மாதவரம் போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை வைத்து, கொள்ளையர்களை தேடுகின்றனர்.