பள்ளிகளில் இயக்கப்படும் 227 வாகனங்கள் சோதனை
குன்றத்துார், குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளில். மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், பள்ளி வாகனங்கள் சோதனை செய்யும் பணி, குன்றத்துார் அருகே மலையம்பாக்கத்தில் நேற்று நடந்தது.இதில் குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேஸ்வரன், ஸ்ரீபெரும்புதுார் சார் ஆட்சியர் மிருணாளினி ஆகியோர், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.ஆய்வுக்கு வந்த 227 வாகனங்களின் படிக்கட்டுகள், அவசர கால வழி, மருத்துவ உதவி பெட்டகம், கண்காணிப்பு கேமரா மற்றும் வாகனத்தின் தகுதி சான்றிதழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதில் 193 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட 34 வாகனங்களின் தகுதி நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைபாடுகளை நீக்கி, மீண்டும் மறு ஆய்வுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.